பனாமாவில் பதிவு செய்யப்பட்ட எம்.டி.மரைன் எக்ஸ்பிரஸ் எண்ணெய்க் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் கடற்பகுதியில் கோட்டனோ என்னுமிடத்தில் கடந்த முதலாம் திகதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
காணமல் குறித்த கப்பலில் இந்திய மாலுமிகள் 22 பேர் இருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல் காணாமல் போனது குறித்து பெனின், நைஜீரியா ஆகிய அரசுகளுக்குத் தெரிவித்துள்ளதாகவும், இந்தியாவும் அந்த இருநாடுகளுடன் தொடர்புகொண்டு கப்பலைக் கண்டுபிடிக்கும் பணிகளில் உதவ வேண்டும் என்றும் கப்பல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
சுமார் 13,500 டன் பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த ஆயில் டேங்கர் கப்பல், கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கப்பல் இருப்பிடத்தை கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், கடற்கொள்ளையர்களிடம் இருந்து மரைன் எக்ஸ்பிரஸ் எண்ணெய்க் கப்பல் மீட்கப்பட்டு இருப்பதாக ஆங்லோ ஈஸ்டர்ன் கப்பல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.