கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அதில், “சவுதிஅரேபியாவில் குற்ற வழக்குகளில் விசாரணை நடைமுறை மிகவும் கவலை அளிக்கிறது. சவுதிஅரேபியாவில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவது நல்லதல்ல. போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை குறைக்க நீதித்துறை நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் ‘டைம்‘ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது “கொலை வழக்கை தவிர மற்ற குற்ற வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சவுதியில் கடந்த வருடம் மட்டும் 150 பேரின் தலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 600 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.