கடற்புலித் தலைவியென சந்தேகிக்கப்பட்ட பகீரதிக்கு விடுதலை

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று, பிரான்ஸிலிருந்து இலங்கை வந்தபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிப் பிரிவுத் தலைவியென குற்றஞ் சாட்டப்பட்டவருமான பகீரதி முருகேசு என்பவர், சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில், அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நீதிமன்றத்தின் பொறுப்புக்கு எடுக்கப்பட்ட பகீரதியின் கடவுச்சீட்டையும், அவரிடமே வழங்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, நேற்று புதன்கிழமை (01), நீதிமன்ற பதிவாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

1991ஆம் ஆண்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்ற பகீரதி, 1996இல் கடற்புலிகளின் பெண்புலிகள் பிரிவின் தலைவியாக நியமிக்கப்ட்டாரென, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார்.

சுப்பிரமணியம் ஜெயநேசன் என்பவரைத் திருமணம் செய்த இவர், 2005இல், தனது கணவனுடன் பிரான்ஸுக்குச் சென்றார். இவர் சார்பில், சட்டத்தரணிகளான கே.வி.தவராசா, நளினி இளங்கோவன் மற்றும் சுபராஜா துஷ்யந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(நன்றி – ரி.பாருக் தாஜுதின்)