கட்சியின் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது, கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் ஒழுக்காற்று குழு மற்றும் மத்திய செயற்குழுவைக் கூட்டி இது குறித்து முடிவெடுக்கவுள்ளதாக, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதானப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் நேற்று ஜனாதிபதி தலைமையில் காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
எதுஎவ்வாறு இருப்பினும் அக் கட்சியின் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில மாகாண சபை பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவில்லை.
மாறாக அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனையில் இடம்பெற்ற மே தினப் பேரணியில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.