கொழும்பில் நேற்று முன்தினம்(30) காலைஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் நேற்றைய (31) அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரத்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.
இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வரத்தக அமைச்சர் ஷேக் அஹமட் பின்; ஜாஷிம் பின்; முஹம்மட் அல் தானிக்குமிடையில் இந்த முக்கியத்துவம்வாய்ந்த ஒப்பநதம்; கைச்சாத்திடப்பட்டது.
உல்லாசப் பயணத்துறை, சமையல் எரிவாயு, விமானப்போக்குவரத்து உள்ளடங்கிய இன்னோரன்ன துறைகளில் பரஸ்பர நாடுகளின் மேம்பாடு தொடர்பிலேயே ஒப்பந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்அமர்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் கட்டார் நாட்டின் வர்த்தக அமைச்சரும் சிறப்புரையாற்றினர். இரண்டு நாடுகளினதும் நீண்டகால உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து இருவரும் தமது உரையில் சிலாகித்துப் பேசினர்.
கைத்தொழில் மற்றும் வரத்தக அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களம், சர்வதேச மூலோபாய அமைச்சின் கீழான ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுங்கத்திணைக்களம். வெளிவிகாரத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஆரம்பமான கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் இரண்டு நாள் அமர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 29 ஆம் திகதி கொழும்பு வந்திருந்த கட்டார் வர்த்தக அமைச்சர் தலைமையிலான 20 பேர் அடங்கிய உயர் மட்ட வர்த்தகத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.
ஊடகப்பிரிவு