கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகத்தை உறுதி செய்ய அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை  

 

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று பாவனையாளர் அதிகார சபையின் உயர் அதிகாரிகாரிகளுடன் நடாத்திய கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அரிசி விலையிலும் பார்க்க அதிகரித்து விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபை கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையினால் நேற்று (8) நிர்ணயிக்கப்பட்டு  இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம் இந்த விலை அமுல் படுத்தப் படுவதாக பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த விலை நிர்ணயத்தின் படி நாட்டரிசியின் ஆகக் கூடிய சில்லறை விலை கிலோ ரூபா 72/- ஆகவும், பச்சையரிசி கிலோ ரூபா 70/- ஆகவும், சம்பா (பொன்னி மற்றும் கீரி தவிர்ந்தது) கிலோ ரூபா 80/- ஆகவும் இருக்குமென பாவனையாளர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிர்ணயிப்பு விலையை அனைத்து வர்த்தகர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்த அமைச்சர் அரிசி இறக்குமதியாளர்கள், இறக்குமதி செய்யும் கொள்ளளவுகள் குறித்த தகவல்களை திரட்டும் வகையிலான நடவடிக்கைகளை சுங்கத்திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளும்படி அமைச்சர் பணித்துள்ளார்  .

”அரிசி இறக்குமதியாளர்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் அரிசியை சந்தைக்கு விடுவிப்பது தொடர்பிலான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாவனையாளர் அதிகார சபையின் அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.’’

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி உரிய முறையில் சந்தைக்கு விடப்படுகின்றதா? என்பதை கண்காணிப்பதற்கும் விசாரணை செய்வதற்காகவுமே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரிசிகளை இறக்குமதி செய்து சந்தைக்கு விடாமல் பதுக்கி வைக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

நெற்சந்தைப்படுத்தும் சபையினால் (பி எம் பி) விடுவிக்கப்பட்ட  நெல் குற்றும் அளவுகள் தொடர்பான கண்காணிப்பையும் விசாரணையையும் நடாத்துவதற்காக  இன்னுமொரு விசாரணையாளர் குழுவொன்றை நியமித்துள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாவனையாளர் அதிகார சபையின் 2003 சட்டத்தின், இலக்கம் 9, பிரிவு 20,05 இன் கீழான கட்டளைக்கிணங்க பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன இன்று (8) அரிசி ஆகக் கூடிய சில்லறை விலை தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதற்கான வர்த்தமானிப் பிரகடனத்தை வெளிவிடுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.