(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
“ரணில் கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, அனைவரும் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் நிதி அதிகாரம் மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ நாடாளுமன்றத்தின் பலம் காகத்திடம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 21வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த காகத்தின் பிடியில் இருந்து நாடாளுமன்றத்தையும் நாட்டை காப்பாற்ற முடியும்.
யார் ஆட்சியில் இருக்கின்றனரோ அவர்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்கி இந்த படுகுழியில் இருந்து வெளியில் வர வேண்டும்.
அப்படி வெளியில் வந்த பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். யார் சரி, யார் தவறு என்பதை தேர்தலில் மக்கள் தீர்மானிக்க சந்தர்ப்பத்தை வழங்குவோம்.
அடுத்த மாதத்தில் இருந்து மருந்துகள் இன்றி மக்கள் மடிவார்கள். உணவு இல்லாமல் போகும் எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பலம் பசில் கையில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவையே உதய கம்மன்பில, காகம் என மறைமுகமாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் என்பதுடன் அவரே அவர்களை வழிநடத்தி வருவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.
இலங்கையில் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் பசில் ராஜபக்சவை காகம் என்று போராட்டக்காரர்கள் குறிப்பிட்டு கோசமிட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.