கம்பஹா மாவட்டத்தில் களமிறங்குகிறது மேர்வினினது கட்சி…

தனது அரசியல் கொள்கைகளை விரும்பும் எவருடனும் இணைந்து அரசியல் பயணத்தில் முன்னோக்கிச் செல்ல தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று(02) காலை அவரது வீட்டில் இடம்பெற்ற, தேசிய மக்கள் கட்சியை பிரபல்யப்படுத்தும் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டுக்காக முன்னோக்கிச் செல்லக் கூடிய வகையில் அனைத்து இனம், மதத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அனைத்து அரசாங்கங்கள் தொடர்பிலும் தான் மகிழ்ச்சி கொள்ளவில்லை எனவும், பொய்யான அரசியலமைப்பை காட்டி நாட்டை பிளவுபடுத்த வரும் எவருக்கு எதிராகவும் தான் முன்னிற்பேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் தனது கட்சி போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.