கடந்த வருடம் கல்விக்காக ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவழிக்காது மீதப்படுத்திய குற்றத்துக்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றில் கொண்டு வரப்பட வேண்டும் என்று மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி கடந்த வருடத்தைக் காட்டிலும் குறைவடைந்தமை தொடர்பில் கருத்துக் கூறிய அவர்,
“இந்த அரசின் மீது அதிக நம்பிக்கை – எதிர்பாப்புகளை வைத்து இந்நாட்டு மக்கள் இந்த அரசை 2015 ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிப்பீடமேற்றினர்.
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை இந்த அரசு எந்தளவு நிராகரித்துள்ளது என்பதற்கு இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தெளிவாகச் சொல்கிறது.
அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டனர். கல்விக்கு ஆறு வீதம் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கினர்.
ஆனால், பாடசாலைகளில் தற்போது இருக்கும் சொத்துக்களை எல்லாம் சேர்த்து 6 வீதத்தை நெருங்கிவிட்டதாகக் காட்டுவதற்கு இந்த அரசு முற்படுகின்றது.
ஆனால், கடந்த வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 17 கோடி ரூபாவை இந்த வரவு – செலவுத் திட்டத்தில் குறைத்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்த எல்லாம் கிடைத்துவிட்டதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சொல்கிறார்.
17 கோடி ரூபா குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை. கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதி எஞ்சி இருக்கின்றது. அதை எடுத்துக்கொள்வோம் என்று அரச தரப்பினர் சொல்கின்றனர். இது பிழை. அப்படி செலவழிக்காமல் வைத்திருக்க முடியாது.
அப்படியென்றால் கொடுத்த நிதியை கல்விக்காக செலவழிக்காது வைத்திருந்த குற்றத்துக்காக கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.