கல்வி அமைச்சில் சாரதிகளாக பணிபுரிந்த 22 சாரதிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சாரதிகள் 22 பேரும் கல்வி அமைச்சின் வாகனங்களை இரவு வேளைகளில் டெக்ஸிகளாக பயன்படுத்தியதால் கல்வி அமைச்சினால் இவர்களை பதவிநீக்கம் செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாதுகாப்பு படையினர் இல்லாமல் தனது சாரதியுடன் மிரிஹானையில் இருந்து தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில்அமைச்சரின் வாகனத்தை முந்திக்கொண்டு சென்ற வாகனம் ஒன்று அமைச்சரின் வாகனத்தை இடைமறித்து நின்றுள்ளது.
பின்னர் அதிலிருந்து இறங்கிய சாரதி அமைச்சரின் சாரதியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தின் கண்ணாடியை கீழிறக்கி யார் இவர் என அவதானித்த அமைச்சர் தனது கல்வி அமைச்சின் வாகனத்தை செலுத்துபவர் என்று தெரிந்து கொண்டதுடன், குறித்த நபர் தொடர்பிலும், அவர் செலுத்தி வந்த வாகனம் தொடர்பிலும் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து தலங்கம பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனங்கள் 22 இரவு நேரங்களில் டெக்ஸிகளாக பயன்படுத்துவது தொடர்பில் அறிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் ஆராய்ந்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறித்த 22 சாரதிகளையும் பணிநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.