கல்வி விசா மூலம் ஆட்கடத்தல் மோசடி

கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி விசாவின் மூலம் சென்று அங்கு பகுதி நேர தொழிலில் ஈடுபடலாம் எனத் தெரிவித்து இளைஞர், யுவதிகளிடம் அதிக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதென அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் எழுத்துமூல அனுமதி இன்றி வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவது சட்டவிரோத செயல் எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு மோசடியில் ஈடுபடும் 15 நிறுவனங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அதில் 7 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.