களியாட்ட விடுதி சர்ச்சையில் ஜனாதிபதி மகனின் தொடர்பு குறித்த விசாரணைக்கு பணிப்பு.

கொழும்பு – யூனியன் பிளேசிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறுகல் நிலை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியால் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் கரு பரணவிதாரன குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்றும், இந்த பிரச்சினையில் மைத்திரிபால சிறிசேனவின் புதல்வரான தஹம் சிறிசேனவின் பெயர் உள்ளடக்கப்பட்டும் ஊடகங்களில் செய்திகள் வௌியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக, பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி விசாரணைப் பிரிவினராலும் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.