காப்பான் சூர்யா பாணியில் தோனி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராஞ்சியில் இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிரிடுவதற்கு விதைகளை நிலத்தில் விதைக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, விவசாயத்தில் கால்பதித்தது நெகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் 38 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.

ஓய்வு நேரத்தில் டோனி வித்தியாசமாக எதையாவது செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். இப்போது அவர் விவசாயம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதில், இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிரிடுவதற்கு விதைகளை அவரே நிலத்தில் விதைக்கிறார். பயிரிடுவதற்கு முன்பாக விவசாயிகள் செய்வது போல் அவரே ஊதுபத்தி ஏற்றி, தேங்காய் உடைத்து வணங்குகிறார்.

ராஞ்சியில் இந்த தர்ப்பூசணி தோட்டத்தை அமைத்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள டோனி, 20 நாட்களுக்கு முன்பு பப்பாளி நடவு செய்யப்பட்டதாகவும், முதல்முறையாக விவசாயத்தில் கால்பதித்தது நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.