காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு ஒத்திவைப்பு…

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கின், மேலதிக சாட்சி விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்க கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று(13) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது, கென்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் மேனக ராஜகருணவிடம் அரச தரப்பு பிரதி சொலிசிஸ்டர் ஜெனரால் சாட்சியம் மேலதிக சாட்சியங்களை பதிவு செய்து கொண்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.