ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில், காற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உடல்நலம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் காற்றில் கலந்துள்ள நஞ்சை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
உலக அளவில் ஏற்படும் காற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு குழந்தைகள் இறப்புக்கான மிக முக்கிய பிரச்சனையாக இருப்பதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 10-ல் 1 குழந்தைக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்பதாகவும் தெரியவந்தது.
இந்த ஆய்வில் 2016-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறினால் உயிரிழந்துள்ளதாகவும் அந்த கருத்தரங்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.