காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் வேறோர் இடத்திற்கு மாற்றம்

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம், அந்நகரிலிருந்து வேறொரு இடத்திற்கு இடமாற்றப்படும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகள் நடைபெறும் இந்த மைதானத்தில் குழந்தைகள் மற்றும் ஏனையவர்கள் விளையாடுவது நியாயமற்றது என்று நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மக்களை மைதானத்தில் விளையாட அனுமதி மறுத்தல், அதுவொரு குற்றச் செயலாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் 100 ஏக்கர் நிலப்பரப்பில் காலி நகருக்கு அருகில் மெட்டேகொட பகுதியில் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் முற்றாக சேதமடைந்தது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்கத்தால் புனரமைப்புச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.