காவி உடை அணிந்த திருவள்ளுவர்; இணையத்தில் பாரிய எதிர்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றப்பட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துக்கு இணையத்தில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

அந்தப் படத்தில், வள்ளுவரின் உடை காவி வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் கை மற்றும் நெற்றியில் திருநீறு பட்டை இருப்பதைப் போலவும் வரையப்பட்டுள்ளது. இதுதான் சமூக ஊடகத்தில் எழுந்த கடும் விமர்சனத்துக்குக் காரணமாகியுள்ளது

இந்த பதிவு தமிழக பாஜகவின் சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றப்பட்டிருந்தது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டதாகக் கூறி #bjpinsultsthiruvalluvar என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இடப்படும் பதிவுகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

ட்விட்டர் பயனர்கள் பலர் இந்த ஹேஷ்டேக்கை இட்டு பாஜக-வை சாடி வருகின்றனர்.

குறித்த பதிவிற்கு இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளர்.

ஏன் இந்த திடீர் டிரெண்ட்?

நேற்று (சனிக்கிழமை) தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், கற்றதனால் ஆய பயனென்கொல் என்று தொடங்கும் குறளை பதிந்து, அதற்கான விளக்கத்தையும் கூறி, அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்று கூறி ஒரு ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?

அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்

கூடவே, திருவள்ளுவரின் படம் ஒன்றும் பகிரப்பட்டிருந்தது. அந்த படம்தான் தற்போது பிரச்சனையாகியுள்ளது.