காஷ்மீரில் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 9 அமைச்சர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக 03 பொலிசார் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பங்கேற்ற சம்பவம் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க. அமைச்சர்களான சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து பா.ஜ.க. அமைச்சர்களையும் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டது. கட்சி அறிவுறுத்தலின் பேரில், 9 அமைச்சர்கள் நேற்று(17) இராஜினாமா செய்தனர். அவர்கள் மாநில பாரதிய ஜனதா தலைவர் சத் சர்மாவிடம் தங்கள் பதவி விலகல் கடிதங்களை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.