இலங்கையில் எவரும் ஊழல் தொடர்பான விசாரணைகளில் இருந்து நழுவி செல்ல முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டி நிர்ணயத்திற்கு வலியுறுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலம் பெற இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நேற்று முன்தினம் ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் சுவிட்ஸர்லாந்து டெவோ மாநாட்டில் பங்கேற்கும் ரணிலிடம் வெளிநாட்டு செய்திசேவை ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கை நாட்டின் விளையாட்டு வீரர்களின் மத்தியில் சமதன்மையை பேணும் வகையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று இதன்போது ரணில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் இலங்கையின் இரண்டு வீரர்களுக்கு 70 ஆயிரம் அமெரிக்கா டொலர்களை வழங்கி போட்டி நிர்ணயத்திற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதனை தாம் மறுத்துவிட்டதாகவும் இரண்டு வீரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பில் ஏதாவது தெரியுமா? என்பதை அறிந்துக்கொள்ளும் பொருட்டே தாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக அஞ்சலோ மெத்தியூஸ் விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.