இலங்கை அணியின் இளம் வீரராக கருதப்பட்ட குசல் மென்டிஸ் தற்போது மிகவும் மோசமாக அஆடி வருவதாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரமான முத்தையா முரளிதரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியா – இலங்கை இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களிலும்,2-வது போட்டியில் 366 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. இத்தொடருக்கு வார்னே – முரளிதரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் இலங்கை மோசமான தோல்வியை சந்தித்தது குறித்து முரளிதரன் கூறுகையில்;
“குசால் மெண்டிஸ் போன்ற இளம் வீரர்கள் அதிக திறமை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இது அவர்களின் பேட்டிங் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
கடந்த 3-4 ஆண்டுகளாக இந்த கதை தொடர்கிறது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுதான் தற்போது நிகழ்ந்துள்ளது. சர்வதேச போட்டியில் களமிறங்கும் போது என்ன செய்ய வேண்டும் என்ற திறன் அவர்களிடம் இல்லை.
தற்போது இலங்கை மிகவும் மோசமாக விளையாடுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஆட்டமும் முன்னர் போல் சிறப்பாக இல்லை. எனினும், ஆஸ்திரேலியாவை விட இலங்கை அணி மிகவும் மோசமாக விளையாடியது.
இலங்கை வீரர்கள் அவர்களுடைய லெவலில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் இலங்கை டெஸ்டை வெல்ல வாய்ப்புள்ளது என கூறுவது கடினம். இது நடப்பதாக நான் பார்க்கவில்லை” என்றார்.