திருகோணமலை மாவட்டத்திற்கான பல அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதியால் இன்று(20) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
திருகோணமலை – கோமரங்கடவெல பகுதியில் மரக்குற்றிகளுக்குப் பதிலாக கொங்றீட் தூண்களை பயன்படுத்தி, 30 கிலோமீற்றர் தூரத்திற்கு நிர்மானிக்கப்பட்ட யானை வேலி, இன்று(20) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த யானை வேலியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மக்களிடம் கைளிக்கவுள்ளார்.
அத்தோடு, புனரமைக்கப்பட்ட கோமரங்கடவெல பக்மி குளமும் மக்கள் பயன்பாட்டுக்காக இன்று(20) கையளிக்கப்படவுள்ளது.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் ஆற்றுப்படுக்கையுடன் கூடிய 500 குளங்களைப் புனரமைக்கும் வேலைத்திட்டமும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாவட்டத்தின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கஷ்டப் பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் விடுதிகள் நூறும் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.