கொச்சிக்கு விமான சேவை ஆரம்பம்..

கொச்சியில் மழை வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து இன்று(20) விமான சேவை ஆரம்பமாகியது.

கேரளாவில் கடும் மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து பகுதிகளும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலோர மாவட்டமான கொச்சியில் இடைவிடாமல் மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கொச்சி விமான நிலையம் கடந்த 14 ஆம் திகதி மூடப்பட்டது. இதனால் கொச்சி வர வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் அல்லது கோழிக்கோடு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்படுகின்றன.

இந்நிலையில் கொச்சி விமான நிலைய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியாத நிலையில், கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று முதல் கொச்சி கடற்படை விமான தளத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது. கடற்படை தளத்தில் முதல் வர்த்தக விமானம் இன்று(20) காலை தரையிறங்கியது.