‘கொண்டையா’ என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவை பிணையில் எடுப்பதற்காக அவரது தாயார் கையொப்பம் இட்டுள்ளமையால் அவரை விடுதலை செய்ய, கம்பஹா நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (23) அனுமதியளித்துள்ளது.
பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா, இரண்டு வழக்குகளில் இருந்து பிணையில் கடந்த புதன்கிழமை (21) காலை விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அன்று மாலை வரை அவரை பிணையில் எடுக்க எவரும் முன்வராததன் காரணமாக அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் உத்தரவிட்டார்.
இதற்கமைய கொண்டையா, மஹர சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.