கொரோனாவால் மீண்டும் தலைதூக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் பெட்டிகலோ கெம்பஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பில் அங்கு அனுப்பப்பட்டோர் தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவை பெற்றுக் கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி உள்ளதுடன் அதற்காக 14 நாட்களுக்கு மூன்று வேளை உணவை பெற்றுக் கொள்ள 7,500 ரூபா பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து அமைதியற்ற விதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று(10) காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வருகை தருபவர்களையும் இவ்வாறு இன்று முதல் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக கந்தக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முகாமிற்கும் குறித்த நாடுகளில் வருபவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், எந்தவொரு மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.