பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுப்பாராயின், அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு, அரசாங்கம் தயாராக உள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று(18) தெரிவித்தார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது என, கோட்டாபய கருதுவாராயின், பாதுகாப்புக்கான கோரிக்கையை அவர் முன்வைக்க முடியுமென, பிரதமர், பாராளுமன்றில் வைத்துத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைப் படுகொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன என்ற விடயம் தொடர்பான சர்ச்சையை, பாராளுமன்றில் ஏற்பட்டபோதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “நான் அறிந்ததன்படி, ஒன்றிணைந்த எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாகவே, அவருக்கு (கோட்டாபயவுக்கு) பாதுகாப்பு வழங்க வேண்டியிருக்கும். இவ்விடயத்தைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயலாதீர்கள்..
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணியின் வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்ட போது, தற்போது ஒன்றிணைந்த எதிரணியில் இருப்பவர்கள் அமைதியாக இருந்தனர், இப்போது அவரது பாதுகாப்புத் தொடர்பில் அவர்கள் கவலையடைகின்றனர்..
அத்தோடு, படுகொலைக்கான முயற்சிகள் தொடர்பில், தானும் ஜனாதிபதியும், ஏற்கெனவே விசாரணைக்காகப் பணிப்புரை விடுத்துள்ளோம்..”