கோட்டா கோ ஹோம் செயற்பாட்டாளர்களை குறிவைக்கும் பொலிஸார்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலி முகத்திடல் “கோட்டா கோ ஹோம்” ஆர்ப்பாட்டத்தில் முன்னிலையாக தொடர்ந்து செயற்பட்டு வரும், அமில ஜீவந்த பீரிஸ் பாதிரியாரை கண்டவுடன் கைது செய்யும் படி உயர் மட்டத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விசேட பொலிஸ் குழு இன்று (27 ம் திகதி) இரத்தினபுரியில் அவர் தங்கியிருந்த தேவாலயமொன்றில் திடீர் சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை  கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் பலவந்தமாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும், ருகுணு பல்லைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அந்தணி வெரங்க புஷ்பிக என்ற இளைஞரே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஒன்றிணைவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த இளைஞர் கலந்து கொண்டதையடுத்து ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட போது GC 0342 என்ற இலக்கத்தை கொண்ட நீல நிற ஜீப் வண்டியில் வந்த சிலர் , அவரை பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர்.

குறித்த இளைஞர் பலவந்தமாக அழைத்துச்செல்லப்படுவதை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.