சகலருக்கும் நிவாரணமளிக்கும் 2016ம் ஆண்டு வரவு – செலவு திட்டம்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் 2016ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கூடாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.க. உபதலைவரும் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் குறித்த இந்த வரவு – செலவு திட்டம் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயம் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கக் கூடிய அபிப்பிராயங்களை ஆராய்வது தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று அமைச்சில் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்னும், 2016ம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் உள்ளடங்கும் வகையில் ஆயிரக்கணக்கான அபிப்பிராயங்கள் நிதியமைச்சுக்கு கிடைத்துள்ளன.

இவை தனி நபர்கள், நிறுவனங்கள், அமைப்புக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் சில பெயர் குறிப்பிடப்படாத நிலையில் நிதியமைச்சினை வந்தடைந்துள்ளன.

குறித்த இந்த அபிப்பிராயங்கள் நிதியமைச்சரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இவை குறிப்பாக தொழில், உற்பத்தி மற்றும் அது தொடர்பான பிரச்சினை, அரசதுறைகளை மறுசீரமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலை அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பிலேயே கூடுதலான அபிப்பிராயங்கள் கிடைத்துள்ளன.

மேலும், 2016ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகள் எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.