2017ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும், ஒரே அணியில் விளையாடுவதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த இந்தத் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில், அடுத்தாண்டு பெப்ரவரியிலும் மார்ச்சிலும் இடம்பெறவுள்ளது. இத்தொடருக்கான அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கராச்சி கிங்ஸ் அணி சார்பாக விளையாடுவதற்கு, மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக, கிறிஸ் கெயில், கெரான் பொலார்ட் ஆகியோரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதே அணியில் விளையாடிவந்த திலகரட்ண டில்ஷான், அவ்வணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெஷாவர் ஸல்மி அணியின் தலைவராகச் செயற்பட்டு வந்த ஷகிட் அப்ரிடி, தனது தலைமைப் பொறுப்பை, டெரன் சமிக்கு வழங்கியுள்ளார்.
ஸ்பொட் ஃபிக்சிங் குற்றத்துக்கான தடையை நிறைவுசெய்து, போட்டிகளில் பங்குபற்ற மீள ஆரம்பித்திருக்கும் சல்மான் பட், மொஹமட் ஆசிப் இருவரும், எந்த அணிகளாலும் தெரிவுசெய்யப்படவில்லை. மூன்றாமவரான மொஹமட் ஆமிர், இவ்வாண்டுத் தொடரிலேயே கராச்சி அணிக்காக விளையாடியிருந்த நிலையில், அவ்வணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

