சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் – அனுர

கணக்கியல் உயர் டிப்ளோமா (HNDA) மாணவர்கள், பொலிஸாரினால் தாக்கப்பட்டமை தொடர்பில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்யவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழுள்ள பொலிஸார், அவரது அனுமதியில்லாமல் ஒருதலைப்பட்சமாக எடுத்த முடிவு காரணமாக அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை(01) இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தெரிவிக்கையில், பொலிஸார், அரசாங்கத்தின் ஒரு பகுதி. எனினும், அரசாங்கம் தமது பொறுப்புக்களிலிருந்து விலகியிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டத்தின் பிரகாரம் ஒருவரை இடுப்புக்குக் கீழேயே தாக்கமுடியும் எனத் தெரிந்திருந்தும் பொலிஸார், மாணவர்களை தலையிலும் தாக்கியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்திக்கச்சென்ற மாணவர்கள், வலுக்கட்டாயமாக துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான சிறப்பு அறிக்கையொன்றை நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது வெளியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.