சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரிந்த போது உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்கும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது வெளிநாட்டில் உயிரிழந்த 20 பேருக்காக 7 மில்லியன் ரூபா அங்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

மலேசியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொரியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதேபோல், சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுக்கு செல்ல முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.