சதொச கிளைகளை மீள திறக்குமாறு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அம்பாறை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள லங்கா சதொச கிளைகளை மக்கள் நலன் கருதி மீளவும் திறக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, அத்தியவசிய பொருட்களை, லங்கா சதொச கிளைகளின் ஊடாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல வருட காலமாக இயங்கி வந்த நிந்தவூர், அட்டாளைச்சேனை, பாலமுனை , மத்திய முகாம், சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய லங்கா சதொச கிளைகள் மூடப்பட்டுள்ளன.

இன்றைய இக்கட்டான கால கட்டத்தில் கூட லங்கா சதொச மூலம் அதன் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாமர மக்களின் நலன் கருதி அம்பாறை மாவட்டத்தில் மூடப்பட்ட லங்கா சதொச கிளைகளை மீளவும் திறக்க தாமதமின்றி ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.