சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு

மைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினார் என்று தெரியவருகிறது.

பௌத்த பிக்குகள் தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மன்னிப்பு கோரியமையினை அமைச்சர் சரத் பொன்சேகா அமைச்சரவையில் வைத்து ஆட்சேபித்தார்.

பௌத்தபிக்கு ஒருவர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே தான் கருத்து வெளியிட்டதாகவும் சரத் பொன்சேகா கூறினார்.

அந்த பௌத்த பிக்குவின் கருத்து மஹிந்த ராஜபக்சவின் பின்னணியில் முன்வைக்கப்பட்டது என்ற அடிப்படையிலேயே, தான் அது தொடர்பில் பேசியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சார்பிலேயே தான் மன்னிப்பு கோரியதாக தெரிவித்தார்.

அத்துடன், பௌத்த பிக்குகளின் ஆதரவின்றி அரசாங்கத்தை நகர்த்தமுடியாது என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்

இதன்போது தலையிட்ட ஜனாதிபதி, இருவரின் கருத்துக்களும் முக்கியமானவை என்றுக்கூறி அமைதியை ஏற்படுத்தினார்.