நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரொஹிங்கிய பிரச்சினையை தமது அரசு கையாளும் விதம் குறித்த சர்வதேச கண்காணிப்பு தொடர்பில் தான் பயப்படவில்லை என மியன்மார் நடைமுறை தலைவி ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் வடக்கு மாநிலமான ரகைனில் இடம்பெறும் வன்முறைகளால் 400,000க்கும் அதிகமான ரொஹிங்கிய முஸ்லிம்கள் எல்லையை கடந்து பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ள இந்நிலையில் குறித்து சூச்சி முதல் முறையாக உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.
எனினும் குறித்த இந்த பிரச்சினையை அவர் கையாளும் விதம் தொடர்பில் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும் அங்கிருந்து பெரும்பாலான முஸ்லிம்கள் வெளியேறவில்லை என்றும் வன்முறைகள் முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று(19) உரையாற்றிய ஆங் சான் சூச்சி, மோதலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் தாம் கவலைப்படுவதாகவும் நாட்டின் அனைத்து சமூகங்களுக்குமான நிலையான தீர்வொன்றை பெற மியன்மார் உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த வார இறுதியில் நடக்கவுள்ள ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள தன்னால் பயணிக்க முடியாததால், தற்போது நாட்டு மக்களுக்காக இவ்வுரையை நிகழ்த்துவதாக தனது பேச்சில் சூச்சி குறிப்பிட்டார்.
மியன்மாரில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்க தனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும் என சூச்சி விருப்பம் தெரிவித்தார்.
“சில ரொஹிங்கிய முஸ்லிம்கள் வெளியேற்றத்தை வைத்து உலக நாடுகள் விமர்சனம் வைக்கின்றன. மியன்மாரில் பெரும்பாலான ரொஹிங்கிய முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் முன்பு இருந்தது போன்றே இன்றும் வன்முறை இல்லாமல்தான் உள்ளன.
சர்வதேச நாடுகள் வன்முறை ஏன் எல்லா இடங்களிலும் பரவவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று சூச்சி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ரகைன் மாநிலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்துள்ள ஆங் சான் சூச்சி, அங்கு நடந்த அத்துமீறல்களுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இராணுவ நடவடிக்கையை நிறுத்தும்படி அமெரிக்கா கடந்த 11ம் திகதி மியன்மாரை வலியுறுத்தியதோடு, மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்ப உதவும்படியும் அமெரிக்கா கோரியுள்ளது.
பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு மியன்மார் நாட்டு ஜெனரல்கள் முழு பொறுப்பு வகிக்கும் நிலையில் சூச்சி அது பற்றி கருத்து வெளியிடவில்லை. எனினும் கடந்த செப்டெம்பர் 5 ஆம் திகதி தொடக்கம் மோதல்களோ, பாதுகாப்பு சோதனைகளோ இல்லை என்று சூச்சி குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் வன்முறைகளை மறுக்கும் மியன்மார் இராணுவம், அரகான் ரொஹிங்கிய மீட்புப் படை என்ற கிளர்ச்சி குழுவுடனேயே சண்டையிட்டு வருவதாக குறிப்பிடுகிறது.
எனினும் பாதுகாப்பு படையினர் இன அழிப்பில் ஈடுபடுவதற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிடுகிறது.
கடந்த ஓகஸ்ட் பிற்பகுதி தொடக்கம் மியன்மாரில் 200க்கும் அதிகமான ரொஹிங்கிய கிராமங்கள் அழிக்கப்பட்டதற்கான செய்மதி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
பெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள ரகைன் மாநிலத்தில் வாழ்ந்து வரும் ரொஹிங்கிய இனமக்கள் (பெரும்பாலும் முஸ்லிம்கள்) நீண்ட காலமாக நாட்டில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
(rizmira)