சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை 4வது முறையாகவும் ரூபவாஹிணுக்கு

நடைபெறவுள்ள T-20 உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து எதிர்வரும் நான்கு வருடங்களுக்கான ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை, தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹிணி தனதாக்கிக் கொண்டுள்ளது.

மார்ச் மாதம் 8ஆம் திகதி இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டி நடைபெறவுள்ள நிலையில், குறித்த இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஐ.சி.சி. சம்பியன் கிண்ண போட்டிகள், மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி, 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் என சர்வதேச போட்டிகள் ரூபவாஹிணியில் ஒளிபரப்பாகவுள்ளது.

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளையும் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையையும் ரூபவாஹிணி தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.

இதேவேளை, இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டிகளில் 10 நாடுகள் பங்குபற்றும் 35 போட்டிகள் “ஐ” தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.

இந்த போட்டிகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கும், இரவு 7.30க்கும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.

அத்துடன், குறித்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான விமர்சனங்களும் இடைநடுவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.