சர்வதேச நீதிமன்றமோ அல்லது கலப்பு நீதிமன்றமோ கிடையாது – நீதியமைச்சர்

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் குறித்து விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றமோ அல்லது கலப்பு நீதிமன்றமோ ஏற்படுத்தபடமாட்டாது என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், ஐ.நா மனித உரிமை பேரவையின் பரிந்துரைக்கமைய, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு நான்கு நீதித்துறைக் கட்டமைப்புக்களை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த தீர்மானம் நாடாளுமன்ற அனுமதிக்காக எதிர்வரும் மார்ச் மாதம் சமர்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், யுத்த விசாரணை குறித்த உள்நாட்டு விசாரணை பொறிமுறையின் போது உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் செயற்பாடுகளை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வரும் நிலையில் அரசாங்கம் விரைந்து செயற்படுவது அவசியம் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.