சவுதியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானங்களில் வந்த மேலும் சில பயணிகளுக்கு நோய்த்தொற்று இருந்ததால் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துபாயிலிருந்து கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சுமார் 521 பயணிகளில், 100-க்கும் அதிகமான பயணிகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சிலருக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதனை அடுத்து, அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
விமானம் துபாயிலிருந்து கிளம்பும் போது சில பயணிகள் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். எனவே, அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பயணிகளுக்கு எப்படி திடீரென நோய் பாதிப்பு ஏற்பட்டது? என்பது குறித்து வெளியாகவில்லை.
இந்நிலையில், நேற்று சவுதி அரேபியாவில் இருந்து பிலடெல்பியாவிற்கு வந்த இரண்டு விமானங்களில் வந்த பயணிகள் சிலருக்கும் நோய்த்தொற்றுக்கான அறிகுறி தென்பட்டதையடுத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த இரண்டு விமானங்களில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 12 பேரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனாலும், புதன்கிழமை ஏற்பட்ட பீதியைத் தொடர்ந்து அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் அனைத்து பயணிகளையும் கண்காணித்து வருகின்றனர்.