சவூதி அரேபியாவின் ஷொப்பிங் மால்களில் இனி வெளிநாட்டவருக்கு பதில் அந்நாட்டவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் 2030-க்கான பொருளாதார சீர்திருத்த சட்டம் சமீபத்தில் வெளியானது.
அதில் சவூதியில் சிறு, குறு தொழிலில் 15 லட்சம் பேர் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.
15 லட்சத்தில் வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே சவூதியை சேர்ந்தவர்கள் என்பதும் மற்றவர்கள் வெளிநாட்டவர்கள் என்ற தகவலும் சவூதி அரசுக்கு தெரிய வந்துள்ளது.
அதாவது சவூதி நாட்டில் சிறு தொழில்கள் நடைபெறும் துறைகளில் 5-ல் ஒருவர் மட்டுமே சவூதி நாட்டைச் சேர்ந்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சவூதி அரேபியாவின் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், அங்குள்ள ஷொப்பிங் மால்களில் இனி அந்நாட்டவர்களை மட்டும் வேலைக்கு நியமிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் குறித்த இந்த நடவடிக்கையால் பல வெளிநாட்டவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம் என சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.