இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்காரவுக்கு இது தான் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி.
இந்தியாவுக்கு எதிரான இந்த 2வது டெஸ்ட் போட்டியோடு தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
சொந்த மண்ணில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சங்கக்கார, தனது சொந்த மண்ணிலே உறவினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் விடைபெறுகிறார்.
இவர் ஓய்வு பெறுவதை தொடர்ந்து மைதானங்கள் முழுவது சங்கக்காரவின் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இவருக்கு சில சிறப்பு பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதே போல் இந்திய அணியும் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறும் சங்கக்காரவை பெருமைப்படுத்த முடிவு செய்துள்ளது.
இன்றைய டெஸ்டில் அவர் சதம் அடித்தால் சதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் 34வது வீரர் என்ற சிறப்பையும், இரட்டை சதம் அடித்தால் அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனின் (12 இரட்டை சதம்) சாதனையை சமன் செய்தவர் என்ற பெருமையையும் பெறுவார்.
மேலும், 145 ஓட்டங்கள் எடுத்தால் இந்த மைதானத்தில் 1000 ஓட்டங்களை கடப்பார். இதன் மூலம் 4 மைதானங்களில் ஆயிரம் ஓட்டங்கள் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
37 வயதான சங்கக்கார இதுவரை 133 டெஸ்டில் விளையாடி 38 சதத்துடன் 12,350 ஓட்டங்கள் (சராசரி 57.71) குவித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
(riz)