போக்குவரத்துக் குற்றங்களுக்காக தண்டப்பணம் அறவிடப்படுதலுக்கு எதிராக, தனியார் பஸ்ஸோ அல்லது தனியார் சேவைகளோ பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அது தடையாக அமையும் என்பதை கருத்தில் கொள்ளுமாறு, இலங்கை அதிபர்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
“எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ம் திகதி முதல், தனியார் பஸ்களும் முச்சக்கரவண்டிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பானது, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், பரீட்சைகள் நிலையத்துக்கு கடமைக்காக செல்பவர்கள் போன்ற அனைவரையும் பாதிக்கும்” என்று குறித்த ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், தொழிற்சங்க தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுமாறும், எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பரீட்சைக்கு எந்தவொரு தடையையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் பட்சத்தில், இதற்கு வேறு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு அரசாங்கம் வழிமுறை செய்து கொடுக்க வேண்டும் என்றும் பரீட்சை அமைதியாக நடைபெறுவதற்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இலங்கை அதிபர்கள் ஒன்றியம் குறித்த கோரிக்கையில் தெரிவித்துள்ளது.