சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் – ஐ.எஸ். பயங்கரவாதிகள் 150 பேர் உயிரிழப்பு…

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற உள்நாட்டுப் போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்தனர். அவர்கள் அங்கு தாக்குதல்கள் நடத்தி பெரும் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு மத்திய யூப்ரடிஸ் நதிப்பள்ளத்தாக்கில் உள்ள ஷபா நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த சதி செய்து வருவதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த 20 ஆம் திகதி அங்கு கடும் வான்தாக்குதல்களை நடத்தியதாகவும், அவற்றில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 150 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று முன்தினம் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில், “ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து வைத்து இருந்த பகுதிகளை குறிவைத்து, கூட்டுப்படைகள் ஷபா நகரில் வான்தாக்குதல்களை நடத்தின. இதில் 150 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்” என கூறப்பட்டு உள்ளது. இதை அமெரிக்க கூட்டுப்படைகளின் செய்தி தொடர்பாளர் கர்னல் ரேயான் தில்லான் உறுதி செய்தார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.