சிரியாவில் ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி…

சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீது ரஷ்ய விமானங்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவின் பல்வேறு நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த நகரங்களை மீட்க சிரியா அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, ரஷ்யா அரசும் சிரியா அரசுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கில் உள்ள டெர் எஸ்ஸர் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மற்றும் நிலைகள் மீது ரஷ்யாவின் விமானப்படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 15 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.