சிரியா தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் 200க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு…

சிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 200க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் நேற்று பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்வேடியா நகரில் தற்கொலைப்படையை சேர்ந்த 3 பேர் தொடர் தாக்குதல் நடத்தினர். அப்பகுதிக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் இதேபோல் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தினர்.

இந்த தொடர் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.