சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான குற்றங்களில் BBSஐ தண்டிக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்.

இலங்கையின்  சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அரசாங்கத் தலைவர்கள் முன்வரவேண்டு என, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பு நாட்டிலுள்ள சிங்கள மக்களிடையே மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருவதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் மதத்தவர்களுக்கும் எதிரான பிரச்சாரங்களையும் பொதுபலசேனா முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான அனைத்துலக மத சுதந்திர அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பில் ஆத்திரமூட்டும் கருத்துக்களை தொடர்ந்து வௌியிட்டு வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கிருஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அனைத்து மக்களினதும் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அரசாங்கத் தலைவர்கள் முன்வரவேண்டு என அமெரிக்கா தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.