மரண தண்டனை கைதியாக வெலிக்கடை சிறையில் உள்ள பிரபல சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா எனப்படும் சமந்த குமார உள்ளிட்ட 7 பேர் சிறையில் இருந்தவாறே ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டியவிடமும் அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.
சிறையில் இருந்தவாறு தனது சகாக்களை பயன்படுத்தி இந்த ஹெரோயின் வர்த்தகத்தை ஏழுபேரும் முன்னெடுப்பதாக கூறும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தொலைபேசி ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வியாபாரம் குறித்த ஆதாரங்களையும் சேகரித்துள்ளது.
இதனிடையே தற்போது களுத்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு போதைப் பொருள் வர்த்தகரான சுரங்க சம்பத்தை சிறையில் வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு முடிவு செய்துள்ளது. அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ள புலனாய்வுப் பிரிவு அவரிடம் இந்த விவகாரம் தொடர்பில் விரைவில் வாக்கு மூலம் பதிவுசெய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்லா ஆகியோரின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
(நன்றி – வீரகேசரி)