ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில், தற்போது ஜப்பானும் தமது கரிசனையினை வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பயன்பாடு, திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியதும், அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும், இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு முக்கியமானது என்று இலங்கை ஜப்பானிய தலைமை அமைச்சர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 12 ஆம் திகதி ஜப்பானியப் பிரதமர் சின்சோ அபேயை ரோக்கியோவில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ஜப்பானியப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் ரணில் கடந்த ஞாயிறு ரோக்கியோவில் இருந்து புறப்பட்ட நிலையில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இலங்கையுடன் கடல்சார் ஒத்துழைப்பை ஜப்பான் வலுப்படுத்த வேண்டும் என்று ஜப்பானிய தலைமை அமைச்சர் சின்சோ அபே வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் கடல்சார் பாதுகாப்பு ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் இரண்டு ரோந்துப் படகுகளை ஜப்பான் வழங்கவுள்ளது.
ஜப்பான்- இலங்கைப் பாதுகாப்புக் கலந்துரையாடல் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த இந்தக் கலந்துரையாடலின் ஊடாக, ஏனைய உதவிகள், மேலதிக பாதுகாப்பு பரிமாற்றங்கள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.