50 கிலோ எடை கொண்ட சீமெந்து பக்கெற் ஒன்றை தனது பற்களினால் கடித்துப் பிடித்தவாறு 5 நிமிடங்கள் நிமிர்ந்து நின்று இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
புத்தளம் இங்கினிமிடிய பிரதேசத்தில் மக்களிடமிருந்து எவ்வித கட்டணங்களும் அறவிடாமல் இச் சாகசங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார் ஆர்.பீ.டி.பிரசாத் குமார சிறிவர்தன என்ற இளைஞர்.
தனது சிறுவயதிலிருந்தே சென்டோ என்ற கண்காட்சி கலையில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், 50 கிலோகிராம் சீமெந்து பைக்கற்றினை எந்தவொரு ஆதாரமும் இன்றி தனது பற்களினால் கடித்து தூக்கியவாறு சுமார் 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கும் இயலுமையை கொண்டுள்ளார்.
அத்துடன், மோட்டார் சைக்கிளை மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்தியவாறு 35 கிலோமீற்றர் வரை இரு கைகளையும் கைப்பிடியிலிருந்து எடுத்தவாறு செலுத்துவதுடன் கொடிய விஷப்பாம்புகளையும் சாதாரணமாக பிடிக்கும் அசாத்திய திறமையையும் கொண்டுள்ளார்.
உழவு இயந்திரத்தினை தனது வயிற்றின் மேலாக செலுத்த விடுதல் மற்றும் எவ்வளவு ஓடுகளையும் தனது உடலில் அடித்து உடைத்தாலும் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தனது உடலில் வலிமை காணப்படுவதாக தெரிவித்தார்.
தன்னால் காண்பிக்கப்படும் இத்தகைய அபாயகரமான செயல்களை யாரும் செய்து பார்ப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என சிறிவர்தன அறிவுரை வழங்கியுள்ளார்.
அத்துடன், தன்னை போன்று திறமையுள்ளவர்களை உலகறிய செய்வதற்கு உரிய தரப்பினர்களிடம் உதவியும் கோரியுள்ளார்.
