சீரற்ற காலநிலை காரணமாக 291 குடும்பங்கள் வெளியேற்றம்…

மத்திய மலை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டததில் இதுவரை மூன்று பிரதேச செயலக பகுதிகளில் 291 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை போன்ற பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றது.

பிரதான வீதிகள், பெருந்தோட்ட பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களுக்கு அருகாமையில் மண்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நுவரெலியா, வலப்பனை, அம்பகமுவ போன்ற பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியிலும், அதிகளவிலான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்டப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 5க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.