சீரற்ற காலநிலை – நான்காயிரம் குடும்பங்கள் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4153 குடும்பங்களை சேர்ந்த 14,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரிதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 6 வீடுகள் முழுமையாகவும் 859 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாட்டை சூழலுள்ள வளிமண்டலத்தின் காற்று மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழுப்ப நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் நாட்களில் அதிகளவான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.