ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காரணம் இல்லை எனவும், மஹிந்த ராஜபக்ஸ கூட்டு எதிர்க்கட்சியாக இருப்பதே காரணம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மைத்திரிபால சிறிசேன பொது அபேற்சகராக போட்டியிட்டதால் இந்த பிளவு ஏற்படவில்லை, தற்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக மஹிந்த ராஜபக்ஷ இருப்பதே காரணம் எனக் கூறினார்.
கட்சி பிளவுபட யாரும் விரும்பவில்லை. இருந்தும் எதிர்கால இலக்கை நோக்காக கொண்டே தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டது மற்றும் நியமிக்கப்பட்டமை இடம்பெற்றதாகவும் அதனால் அனைவரும் கட்சியோடு இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவன் என்ற வகையிலும் இளைஞர் முன்னணியின் தலைவர் என்ற வகையிலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுடன் நிகழ்வை சிறப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்