சுதந்திரத்தின் பின்னர் முதற்தடவையாக முஸ்லிம்கள் அற்ற அமைச்சரவை – சிலர் குளிர் காய நினைக்கின்றனர்

(FASTNEWS|COLOMBO) – அமைச்சர்கள் சிலர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையாக விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கூறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அனைவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்து, ஒரு மாதத்திற்குள் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அமைச்சர்கள் குறித்து வாக்குமூலமளிப்பவர்கள், சாட்சியமளிப்பவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று தமது விடயங்களை பதிவு செய்ய முடியும் எனவும், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் தெரிவித்திருந்ததாவது, ஐஎஸ் குழுவை இங்கிருந்து ஒரு மாதத்தில் நாம் இல்லாதொழித்தோம். அது உலக சாதனையாகும். இதனை சாதித்த சில நாடுகளே உள்ளன. நாட்டில் இனவாதம் தலை தூக்குவதற்கு இடமளிக்க வேண்டாம். நான் இது குறித்து கவலையடைந்தேன். அதனாலேயே இன்றும் அது குறித்து பேசுகின்றேன்.

எமது அரசாங்கத்திலிருந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். சுதந்திரத்தின் பின்னர் முதற்தடவையாக முஸ்லிம்கள் அற்ற அமைச்சரவை காணப்படுகின்றது. இது தொடர்பில் ஒரு சிலர் மகிழ்ச்சியடைய முடியும். எனினும், நாட்டிற்கு அது சிறந்ததல்ல. யுத்த காலத்தில் அவர்கள் முழுமையாக எம்முடன் இருந்தனர்.